ஞாயிறு, 11 டிசம்பர், 2016

காண்கிறது எப்போவம்மா ?!






கருணையுள்ளத்துக்கு எந்தாயி
கட்டழகி சொல்லுக்குக்
கரடிபுலி யத்தனையும்
கால் மடக்கித் தெண்டனிடும் !!
இப்போ..
கருணை யழகடங்க எந்தாயி
கட்டழகி சொல்லடங்கக்
கரடிபுலி யத்தனைக்கும்
கவலையத்த நித்திரையாம் !!

வீணையழகுக்கு எந்தாயி
வித்தாரக் குரலுக்கு
வேங்கம்புலி யத்தனையும்
விரல் மடக்கித் தெண்டனிடும் !!
இப்போ..
வீணை யொலியடங்க எந்தாயி
வித்தாரக் குரலடங்க
வேங்கம்புலி யத்தனைக்கும்
விசனமத்த நித்திரையாம் !!

தெய்வமழகுக்கு எந்தாயி
தேவதையாள் வாக்குக்கு
திருடவந்த கூட்டமெல்லாம்
தேரடியேத் தெண்டனிடும் !!
இப்போ..
தெய்வ மழகடங்க எந்தாயி
தேவதையாள் வாக்கடங்க
திருடவந்த கூட்டத்துக்கு
தேசமெல்லாம் பொம்பொதயல்  !!

மலையப் பொடிநுணுக்கி   எந்தாயி
மருமலைய வில்வளைப்பா!!
மாடுமக்க ளெல்லாரும் நாங்க
மகிந்துதா ங்கெடந்தமம்மா !!
இப்போ..
மலையும் இரும்பாச்சு
மருமலையும் வீணாச்சு!! எந்தாயி
மாதா திருமுகத்த
மதியுடையாள் தன்னழக
மாடுமக்க ளெல்லாரும் நாங்க
மகிந்துபோயிக் காண்பதெப்போ?!

கல்லைப் பொடிநுணுக்கி  எந்தாயி
கருமலைய வில்வளைப்பா!!
காப்பாத்த ஆளிருக்க நாங்க
கவலையத்து இருந்தமம்மா !!
இப்போ..
கல்லும் மலையாச்சு
கருமலையும் வீணாச்சு!! எந்தாயி
கட்டழகி  திருமுகத்த
காரழகி  தன்னழக  நாங்க
காண்கிறது எப்போவம்மா ?!