திங்கள், 15 டிசம்பர், 2014



கொங்கில் கூடியிருந்து குளிர்ந்தகதை-1

இன்று மார்கழி ஒன்று. மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று மாதவன் சொல்வதாகக் கேட்டிருக்கிறேன். அடுத்து வருவது தை மாதம் என்பதாலும், அதுசார்ந்த கொண்டாட்டங்களுக்கு இந்த மார்கழி மாதத்திலேயே தயாராவதாலும், மார்கழியை வழிபாடுகள் நிறைந்த மாதமாகவே கொங்குப் பகுதிகளில் கருதப்படும். மார்கழி என்றாலே வீதிவரை அடிமார் போட்டுக்கூட்டி சொதம்பக் கரைத்த சாணித்தண்ணி தெளித்த வாசல்களும், அதன் நடுவில் அலர்ந்து கிடக்கும் கோலங்களும், காராம்பசுமாட்டின் சாணாங்கி எடுத்து கன்னியர் கையினால் வைத்திட்ட பிள்ளையார்களும், அந்தப் பிள்ளையார்கள் மார்கழி முப்பதில் ஒவ்வொரு ஆறு நாட்களுக்கும் ஒரு வகைப்பூ வீதம் (ஐந்து திணைகளைக் குறிப்பதற்காக என்று நினைக்கிறேன்) ஐந்து வகையான பூக்களைத் (அருகு, பிச்சி, அரசாணி (பூசணி), பூளை, ஆவரை) தன் சென்னிமேல் சூடிக்கொண்டு அமர்ந்திருக்கும் வாசல் நிறைந்த காட்சிகளும், கோழி கூப்பிடும் முன்னரும், அந்தி சாயும் முன்னரும் என்று இருவேளை ஒவ்வொரு வீட்டின்முன் முழங்கப்படும் சங்கொலியும், புல்லும் புதரும் அண்டிப் போகமுடியாக் காட்டுக் கோயில்களில் பதிகொண்டு இருக்கும் ஏழைத்தெய்வங்களுக்கு முப்பதுநாள் நித்தப்பூசை மணிச்சத்தங்களும், "கோலப்பொடி வாங்கிலியோவ் கோலப்பொடேய்" என்ற கோலமாவு வியாபாரிகளின் விநோதக் குரல்களும், மரமெல்லாம் நடுங்கும் மார்கழிக் குளிருக்கு இதமாய் இருக்கும் கிணற்றுத் தண்ணீரும், ஊர் தோறும் இசைவளர்க்க உருவான பசனைக்கோயில்களும், அங்கு சங்கீத கலா சாம்ராட் போல தோற்றத்தில் வலம் வரும் ஆர்மோனியப் பெட்டிக்கார அய்யாவும், தவிலுக்கும், வடநாட்டு டோலக் க்கும் சேராமல் இடையில் ஒருவகையாய் ஒலிக்கும் மிருதங்கமும், அதை வாசிக்கும் மேதைகளும், அவர்பாடும் ஆண்டாளின் திருப்பாவையும், மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும், இடையிடையே கோவிந்த நாமம் சொல்லும் பஜனைக் கோஷ்டியும், இரவிவர்மாவின் இராமர் பட்டாபிசேகப் படத்துக்கு சூட்டப்பட்டு தெருவரைக்கும் மணக்கும் திருத்துழாய் (துளசி) மாலையும், அதிகாலையில் அங்கே கொடுக்கப்படும் அக்காரஅடிசிலும்(பாலும்-வெல்லமும்-நெய்யும் கலந்த சோறு -சர்க்கரைப்பொங்கல் அல்ல), தேங்காய் சொறுவிப்போட்ட சுண்டலும், விடிவதற்குள் கோலம் போட்டாகவேண்டும் என்ற தவிப்பில் இருக்கும் பெண்களும், அதற்காகவே நடுசாமத்தில் வாசல்கூட்டி வைத்துவிட்டு விடியல் நோக்கிக்காத்திருக்கும் அம்மணிகளும், உழைக்கோள் மீன் கீழ்வானில் தோன்றும் போதே தோட்டத்துக்குப் புறப்பட கைங்கால் மொகங்கழுவிக் கொண்டே உருமாலைக்குத் துண்டும், குளிருக்குக் காப்பி கேட்கும் குடியானவர்களின் ஆணையிடும் சத்தங்களும், காப்பி கொடுத்த தன் இல்லாளை நோக்கி "பால் போகிணிக்கி தனியா சொல்லோணுமேக்கு ?? அதையும் எடுத்தா...."" என்ற மிரட்டும் சலம்பல்களும், புறப்படும்போது "கொஞ்சமாக் கோமயமும், இன்னத்த பால்ப்பூசைக்கி பாலும் தனியாச் சொம்புல கொண்டாந்துருங்க" என்ற அம்மாக்களின் கட்டளைகளும், மார்கழி நீராட்டுக்கும், வெள்ளருகு, வெள்ளெருக்கு, அருகு, செம்பருத்தி, நந்தியாவட்டை, செவ்வரளி மாலைகளுக்கும், அவரின் அம்மாவைப்போல அழகான பொண்ணுக்கும் ஊர்த் தலைவாசலில் (நல்லதும், கெட்டதும் கடந்து செல்லும் இடம்) இருக்கும் அரசமரத்தடியில் கிழக்கு பார்த்து அமர்ந்து காத்துக் கொண்டிருக்கும் பிள்ளையார்களும், மார்கழிப் பட்டத்தில் நெடக்களைக்காய் சால் போடவும், மிச்சமாகும் பிஞ்சு விதைகளை வரும் தை நோம்பிக்கி எண்ணெய் ஆட்டவும் காய் தொழிக்க (நிலக்கடலை தோல்உரித்தல்) பக்கத்து வீடுகளின் திண்ணைகள் வரைக்கும் சாடுகளில் கொண்டு சென்று ஊர் நாயம் ஒலக நாயம் நொப்பமாக பேசிக்கொண்டே விளையாடிக்கொண்டு இருக்கும் எங்களைப்போன்றப் பொட்டு பொடுசுகளிடமும் "அட அம்பூ, சின்னம்மிணி...வாங்க ... சித்தவடம்... ஒரு ரெண்டு வள்ளக் காய்க்கி தொழிச்சு குடுங்கொ...பிஞ்சு வெதைஎல்லாம் நீங்களே எடுத்துக்குவீங்களாமா... வாங்க சாமீ..." என்று வேலை வாங்கும் தாய்களும், அட அம்பு வா... காய் தொழிக்கலாம்... ஆளுக்கு ரெண்டு கை போட்டா அஞ்சே நிமிசத்துல பூராக் காயும் தொழிச்சுப் போடலாம் என்று என்மீது நம்ப பாசமா (வேசம்??!) போட்டுக் கூப்பிடும் பக்கத்து வீட்டு ஆத்தாக்களின் அன்பு வேண்டுதல்களும், தொழிச்ச பெறகு மிஞ்சும் தொல்லிகளை (தோல்) பொரிக்கா செட்டியாரம்மாவுக்கு பொரிக்கு பண்ட மாற்றாய் கொடுத்துவிடுவதும், மஞ்சளும், பச்சையும் கலந்த ஒயர்களில் இணைக்கப்பட்டு காரை வாசலில் நிறுத்தப்பட்ட மரக்கம்பையில் ஒளிரும் குண்டு பல்பின் மஞ்சள் வெளிச்சத்தில் பொங்கலுக்காக ஒயில் கும்மிப்பயிற்சி பெறும் காளையர்களின் பெருஞ்சலங்கை நாதங்களும், மாரியம்மன் கோயில் மணல்பரப்பில் கிழக்கிலிருந்து கூட்டிவந்திருக்கும் தேவராட்ட வாத்தியார் உருமி மேளம் வாசிக்க பொங்கல் பூநோம்புக்காக உருமியாட்டம் பயிலும் இளையர்கள் என்று எங்கு பார்த்தாலும் கலையும், இசையும், தமிழும், கடமையும் என்று எம்மக்கள் மார்கழியில் கற்பித்தவைகள் ஏராளம். காலை என்ற பொழுதுக்கு நேரமே எழுதல் என்ற ஒழுக்க நெறியும், நீராடுதல் மற்றும் இறைக்கு நீராட்டுதல் என்ற பண்பாட்டு நெறிகளையும் சொல்லும் விதமாய் இருந்தது எங்களின் பால்யகாலத்து மார்கழிகள்.

நான் பதினொன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ஆண்டின் மார்கழி மாதம். பக்கத்து வீட்டில் இருந்த ஆறாத்தக்காள் தான் இன்றைய கதைநாயகி. ஒல்லியாக இருப்பார். முடி அதிகம் இல்லையென்றாலும் நேர்த்தியாக சவுரி வைத்து சீவி கோடாலி போடாமல் உருண்டைக்கொண்டை போட்டு வலையும் போட்டிருப்பார். வடிகட்டிய டீத்தூளையும், சின்னவெங்காயச் சருகையும் அவர் வீட்டு ரோசாச் செடிக்குப் போடுவதால்தான் அடர் சிவப்பில் பூ வெடிக்கிறது என்று ஆழமாய் நம்பி சில சமயங்களில் குடிக்கிற காப்பியும் கூட சேர்த்து செடிக்கு ஊற்றிவிடுவதுண்டு. வீட்டுக்காரர் எங்கேயோ ஒரு பெரும் பணக்காரர் வீட்டில் சமையல் வேலை செய்கிறார் என்று பலர் சொல்லக் கேட்டதுண்டு. ஓரிருமுறை அவரைப் பார்த்திருக்கிறேன். புது நெல்லு புது நாத்து சீலை முன் கொசுவம் வைத்து நேர்த்தியாக எப்பவும் உடுத்தியிருப்பார். கொங்கு மக்கள் மூன்று விதமாய் சேலை கட்டுவதுண்டு. அறுபது நூல் (ஆறு கசம் (கஜம்)), எம்பது நூல் (எட்டுகசம்) புட்டாப் போட்ட சேலைகளை (நல்ல கனமாக இருக்கும்) முழுமையாகப்பின் கொசுவம் வைத்தும், கனம் குறைந்த நூல் சேலைகள்-கண்டாங்கி முறையில் மிகக்குறைவான கொசுவம் வைத்தும், பார்ப்பதற்கு முன்கொசுவம் வைத்திருப்பது போலத்தெரியும் வகையிலும், முழுவதுமாகவே முன்கொசுவம் வைத்தும் கட்டியிருப்பார்கள். ஆனால் மூன்று வகைக் சேலைக்கட்டுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கும் அது இடப்பக்கமாய் தோளில் போட்ட முந்தானையை வலப்பக்கத்தில் கொண்டுவந்து வயிற்றை மறைத்து அதன் இடப்பக்கத்தில் (மடிகட்டுவது போல்) செருகிக்கொள்வதுதான். வயிறு தெரிந்தாலே தம் மானத்துக்குப் பங்கம் வந்துவிட்டதாக நினைக்கும் மகராசிகள்.

நெற்றியில் திருநீற்றுக்குப் பதில் சந்தனம் துலங்கினால் அன்றைக்கு வெள்ளிக்கிழமை என்று நாம் புரிந்துகொள்ளவேண்டும். சீலைக்கு தகுந்த இரவிக்கையும் போட்டிருப்பார். ஆறாத்தக்கா...சீல புதுசா? இது என்ன வெல? என்று யாரேனும் கேட்டுவிட்டால் போதும் பூரித்துப்போவார். கேட்டவுங்களுக்கு காப்பி கன்பார்ம். அதான் மேக்க ஆனமல செட்டியார் கொண்ட்டுவந்தது... நூத்தம்பதுதே...ன்... நல்லா இருக்குதா என்று கல்யாணத்து ஊட்டுல பொண்ணுப் புள்ளைய போட்டோக்கார் திலும்பி திலும்பி நிக்கச் சொல்லும்போது புள்ள சும்மா எட்டுக்குப் பத்துத்தடவ திலும்பி நின்னு சீலையையும் மூஞ்சியையும் காட்டுமே அதுமாதிரி காட்டுவார். அதோட மட்டுமில்ல கேட்டவுங்களோட சீலையையும் புடிச்சுப்பாத்து இதும்மு நல்லாத்தான இருக்குது...இதெங்கெடுத்தது? புள்ளாச்சில்லீயா?? என்று கேட்டுக்கொண்டே இடங்கால் மடக்கி வலங்கால் கீழ்வைத்து பாம்பணைந்த உடுக்கையும், பாசாங்குசமும், குறுவாளும், கபாலமும் கையிலேந்தி உக்காந்திருப்பாளே மழைக்காரி மாரி... அவளைப்போல கொசுவம் விரிந்த நிலையில் சேலையை ஒதுக்கி உட்கார்ந்துகொண்டு...ஒரு கெலாசு காப்பி போடறேன் குடிச்சுட்டு போ..ன்னு சொல்லுவார். சீலையப்பத்தி கேக்கற பொம்பளைக காப்பிக்கித் தான பாட்டு படிக்கிறதுன்னு ஆறாத்தக்காளுக்குத் தெரிவதில்லை. அவரைப் பொறுத்தவரை தன் சீலையும் ரவுக்கையும் நல்லா இருக்குதுன்னு சொல்றவுங்க எல்லாருமே நல்லவுங்கதான். காப்பி வெய்க்க வெய்க்க உன்ர சாக்கிட்டு நல்லா “பரு பரு” ன்னு இருக்குது.. புளுவாயிலா.. பாலீஸ்ட்ரா?? உடனே காப்பிக் பாட்டெழுதிய புலவிகள் அய்யோ இல்லீக்கா... இது அம்பர் பாலீஸ்ட்ரு... என்று காப்பி கொதித்து விட்டதா என்று எட்டிப்பாத்துக் கொண்டே சொல்வார்கள். உடனே ஆறாத்தக்கா ரவிக்கையின் கைப்பக்கத்தில் ஒருவிரலை உள்வைத்துகாட்டிய படி “எழுபது பாயிண்ட்டில புளுவாயில்துணி எடுத்து சாக்கிட் தெய்க்கரதுக்கு இந்தக் கொத்தவரங்காயன் டெய்லரு (ஒல்லியாக இருப்பார் டெய்லர்) கிட்டத்தான் தெக்கக் குடுத்திருந்தேன். அளவு சாக்கிட்டுக் குடுத்திருந்தும் கைய கொஞ்சம் எறக்கமா வெச்சு தெய்க்காம மேல தூக்கி வெச்சு தெச்சுபோட்டான் கட்டித்தின்னி... என்று திட்டிக்கொண்டே காப்பி குடுப்பார் (அவர் வீட்டுக்காரர் கொண்டுவந்த காப்பிப்பொடி நல்லா நொப்பமா இருக்கும்ங்கற நப்பாசையில்தான் இந்த சீலைப்பாட்டுகள் அரங்கேறும்!!).
மூன்று அங்கணத்தில் சிறு வீடுதான். பக்கத்தில் சமையலுக்குக் கொட்டம் இருந்தது. நிறைய சிலுவர் பாத்திரங்கள் வைத்திருப்பார். ஒரே ஒரு பீரோவும் இருக்கும். மல்லிகைப்பூ காலங்களில் கோர்த்த மல்லிகைபூ செண்டை அரைமணிநேரம் பீர்வாக்குள் வைத்து மணம் பரப்புவார். பின்னர் எடுத்து குடி தண்ணீர் சால்ப்பானை மேலிருக்கும் தட்டத்தில் வைத்து வெள்ளைத்துணி கொண்டு மூடி விடுவார். புட்டுக்குண்டா, வாணாச்சட்டி, பொங்கத்தவலை, என்று நிறைய பித்தாளை பாத்திரங்கள் உமிச்சாம்பல், உப்பு, புளி போட்டு வெளக்கி செவுத்துப் பலகையில் கமுத்தியிருப்பார். வீடும் திண்ணையும் மஞ்சக் கொளிச்சமாதிரி மாட்டு சாணி போட்டு செவுத்து ஓரத்தில் சாணிப்பாலை துணியில் பிழிஞ்சு சுண்ணாம்பு வெள்ளைக்கு பங்கமில்லாமல் கரைக்கட்டி வளித்து விட்டிருப்பார். ஒருநாள் விட்டு ஒருநாள் பைப்பில் வரும் திருமூர்த்திமலை தண்ணி பிடிக்க முதலில் குடம் வைப்பதும் அவராகத்தான் இருக்கும். பைப் ல "புஸ்....புருச்சுக்..புருச்சுக்" ன்னு சத்தம் வரும்வரைக்கும் அவர் குடங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றதாக நானறியேன். பொழுதோட ஏழு மணியானாலும் செரி...வெடியால நாலுமணியானாலும் செரி... அவர்தான் மொதக்கொடம்...வைக்கணும்... தப்பித்தவறி வேற யாராவது வந்து கொடத்த வெச்சுட்டா அவிய கூட வாரக்கணக்குல புட்டுக்கு போட்டுக்குவார்.. (மூஞ்சியை உம்முன்னு வெச்சுக்கறது...  ) கொஞ்சம் ஏமாந்துட்டம்னா என்ர புருசனீங்கூட கூட்டிட்டு போயிருவாளுக ன்னு சாடை வீதி வரை பேசுவார். நாங்க எப்பவுமே ஏழாவது எட்டாவது ஆளா ஓடி கடசி ஆரு? கடசி ஆரு? (எனக்கு முன்னால் வந்தவர் யார் என்று சத்தம் போட்டுக்கேட்கவேண்டும்) ன்னு கேட்டு அப்புறம் தண்ணி புடிச்சுட்டு வருவோம்.

மார்கழிக்கு ஒருவாரம் முன்பிருந்தே தயாராவார். ஏனம்பு அந்தக் கோலப்புடிக்காரன பாத்தயா?? என்று என்னிடம் கேப்பார். அவர் போடும் கோலங்களிலும் பலவகை உண்டு. அதில் நேர்புள்ளி (8 புள்ளி 8 வரிசை), இடைப்புள்ளிகள் (16 புள்ளிகள் முதல் 8 வரை இடையிடையே புள்ளிகள்) என்று பல வடிவங்களில் புள்ளிகளை இணைத்தோ அல்லது புள்ளிகளை சுற்றியோ (நெளிக்கோலம்) கோலங்கள் அவர் வாசலில் மிளிரும்.
நானும் செரியான பக்திப் பழமாத்தான் இருப்பேன். பக்திக்கு ஊன்றுகோலாய் இருந்த என் ஆத்தாவுக்கே சில நேரங்களில் பிடிக்காது என் அளவுகடந்த பக்தியும், வழிபாடுகளும், வாரக்கணக்கில் உண்ணாவிரதங்களும் (சித்திரை முருகனுக்கு மாலை, ஆவணி ஞாயிற்றுக்கிழமைகள் விரதமிருந்து வாரம் தவறாமல் திருமூர்த்திமலை பயணம், புரட்டாசி சனிக்கிழமைகள்-ஏழுமலையான் கோயில், ஐப்பசி ஏழு நாட்கள் சஷ்டிக்கு உண்ணாவிரதம், கார்த்திகை திங்கள்கிழமைகள், மார்கழி (சொல்லப் போகிறேனே.. ), மாசி-சிவராத்திரி) என்று ஆண்டின் பல நாட்கள் நான்செய்த பக்தி அட்டகாசத்தால் எல்லாரும் பயந்து எங்கே சாமியாராய்ப் போய்விடுவேனோ கிலியில் இருந்தார்கள். இதுபோக பக்கத்து ஊர்களில் நோம்பு சாட்டியிருந்தால் சாமி அழைக்க அடியேனைக் கூப்பிடுவார்கள். எங்கள் ஊர் தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தில் காமாட்சிக்கு நோம்பு சாட்டினால் முதல் அழைப்பும் முதல் திருநீறும் எனக்குத்தான் கிடைக்கும். எல்லோரும் எம்மக்கள். மாற்று மதத்தைச்சார்ந்த எல்லோரையும் மதிக்கும் மாண்பும், அவர்களை பட்டிப்பொங்கலுக்கு அழைத்து விருந்து கொடுத்து மகிழ்வார்கள். சரி கதைக்கு வருவோம்...

மார்கழி அப்படின்னாலே நீராடிவிட்டு இறைக்கு நீராட்டுதல் என்ற பண்பாடுதான் எனக்குத்தோன்றும். சீலை, கோலம், வீடு-வாசல் சுத்தம், சுய அலங்காரம், பைப் தண்ணி என்று சகலத்திலும் தான்தான் முன்னோடியாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் ஆறாத்தக்கா எங்கள் வளவின் இராணி. அதே போல மார்கழியில் ஆண்டுதோறும் முதன் முதலாக பிள்ளையாருக்கு தண்ணி ஊற்றி அவரின் அன்றைய முதல்வரத்தைப் பெற்றுவிட்டதாக மகிழ்ந்து கிடப்பார். போறவுங்க வாரவுங்க கிட்டயெல்லாம் இன்னக்கி வெநாயனுக்கு தண்ணி ஊத்துனையா??? நானு நாலுமணிக்கெல்லாம் மொதத்தண்ணி ஊத்திட்டு வந்துட்டேன் என்று பெருமை சொல்வார். பக்திப்பழம் நான் மட்டும் என்ன சும்மாவா? இந்த வருசம் எப்பிடியும் நாம்தான் விநாயகனுக்கு தண்ணி ஊத்திரணும்ங்கற வெறியில இருந்தேன். பொழுதோடவே பித்தாளை தீர்த்தச்சொம்பு தயார். நிறைகுடத்திலிருந்து தீர்த்தக்குடத்துக்கு தண்ணீரும் நடுராத்திரியில் மாத்தி ரெடியா வெச்சாச்சு. ஆத்தா வீட்டுக்குள் தண்ணி அடுப்பில் ஓலையும், பாளையும் வெச்சு வெச்சுட்டு படுக்கப்போற போது மணி பன்னெண்டு. பனியில படுக்காத என்று அம்மா சொல்லச் சொல்லக் கேக்காமல் ஒரு சரட்டின் ஒரு முனையைக் கையில் கட்டிக்கொண்டு மறுமுனையை திண்ணையில் உள்ள கூசத்தில் கட்டிவிட்டு (அலாரம் இல்லை-திரும்பிப் படுக்கும்போது கயிறு இழுத்து நம்மை எழுப்பிவிடும் என்பதால்) படுத்துக்கொண்டேன். நம் வீட்டைப்பற்றித்தான் ஏற்கெனெவே சொல்லியிருக்கிறேனே. வாசலும் வீதியும் கிட்டத்தட்ட ஒன்று என்று. வெடியால யாரோ எழுப்புவதுபோல் இருந்தது. ஆறாத்தக்காளேதான். அட இதென்ன “அம்ம்பு” உன்னாமு எந்திரிக்கிலியா?? மார்கிழி ஒண்ணாந்தேதி வெநாயனுக்கு தண்ணி ஊத்தப் போகுலியேக்கு?? என்றார். ஊர்ல இருக்கற எல்லாரும் நம்ம ஊட்டு வழியாத்தான் வெடியால வெளிய போரக்கு வருவாங்க. அப்படி போறபோதுதான் நான் திண்ணையில தூங்கரதப்பாத்துட்டு அம்மாகிட்ட கேட்டிருக்கிறார். நான் அடிச்சுப்புடிச்சு எந்திருச்சுப் பாத்தால் மணி ஆறரை. கையில் கட்டியிருந்த சரடு துண்டம் போடப்பட்டு நூல்கவுத்துல நாய்க்குட்டியக் கட்டிவெச்சா எப்பிடி கடி கடின்னு கடிச்சு துண்டம் போடுமோ அதுபோல திரிசல் வெலகி என்னை ஒரு நாய்க்குட்டி போல காட்டியது. அன்னைக்கும் ஆறாத்தக்காள் தான் வெற்றியாளர். என்னைத் தூக்கப்பேய் புடிச்சதால் எனக்கு அந்த வாய்ப்பு கிட்டவில்லை. இன்றைக்கு ஆறாத்தக்கா வேறு ஊருக்குக் குடிபோயிட்டதா சொன்னார்கள். இப்போதும் மார்கழி மணக்கிறதா?? தெரியவில்லை...
(பி.கு.: துண்டம் போட்டது வேற ஆருமில்லீங்க.. என் பிறவி எதிரி ஆத்தா தான்.. நடுசாமத்துல எனக்குத் தெரியாம கம்பரக்கத்தி வெச்சு சரட்ட அறுத்துட்டதுமில்லாம வேற ஒரு கனமான கம்பிளியையும் எனக்கு போத்திவிட்டுட்டு கமுக்கமாப்போய் படுத்துக்கிட்டாங்க. மார்கழிக் குளிருக்கு கம்பிளி நல்ல கதகதப்பாய் இருந்ததால் நானும் வாயைத் தொறந்து தூங்கிட்டேன். அப்புறம் என்ன ஏறுகால் வெயிலில் தண்ணியக் கொண்டுட்டு கோயிலுக்கு ஓடினேன்.)

இதோ இன்றைய நீராடுதல் பற்றிச் சொல்லும் ஆண்டாளின் திருப்பாவையில் முதல் பாசுரம். நாட்டை இராகத்தில் (பிள்ளையார் பாடல்கள் பெரும்பாலும் இந்த இராகத்தில் தான் இருக்கும்)

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

(பொருள்: "அழகிய ஆபரணங்களை அணிந்த கன்னிப் பெண்களே! வளமும் சிறப்பும் மிக்க ஆயர்பாடியில் உள்ள செல்வச் சிறுமியரே! மாதங்களில் சிறந்த மார்கழி மாதத்தில், முழு நிலவு வீசும் பௌர்ணமி நன்னாளில், பாவை நோன்பில் கலந்து கொண்டு நீராட விரும்புகின்றவர்கள், வாருங்கள், போகலாம்! கூர்மையான வேலையுடைய நந்தகோபனுடைய குமாரனும், யசோதைக்கு இளம் சிங்கக்குட்டி போன்றவனும், கரிய மேனியும், செந்தாமரைக் கண்களையும், ஒளிர்கின்ற நிலவைப்போல குளிர்ந்ததாயும் உள்ள திருமுகத்தையும், உடையவனும், ஆன நாராயணன், நம் நோன்புக்கு வேண்டிய பொருட்களையும், நாம் விரும்பிய வரங்களையும் தந்து அருள் புரிவான். எனவே உலகத்தார் நம்மை போற்றும் வண்ணம், நோன்பிருந்து அவன் திருவடி பணிவோம், வாருங்கள்!")

வியாழன், 23 அக்டோபர், 2014

தண்ணீரை எண்ணையாக்கிய கதை தொடர்ச்சி.....


வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் (குறள் 435)

என்பார் வள்ளுவர். அதுபோல பொழுதோட அம்மாகிட்ட விழுகும் அடிய வாங்கும் முன்னே  ஏதாவது செஞ்சு தப்பிச்சுக்கடா தம்பி....ன்னு மனசு சொல்லிச்சு... அம்மாவுக்கு நாம பண்றது தப்புன்னு தெரிஞ்சுது அவ்வளவுதான்... தெவரை வெளார் எடுத்தா பிஞ்சு போகுற அளவுக்கு நிறுத்த மாட்டார்  மகராசி. நெம்ப கண்டுசனாத்தான் எப்பவுமே இருப்பார். நல்ல நேரமாப் போச்சு... செலுப்பிளிருந்த வெளிச்செண்ணை (தேங்காய் எண்ணெய்) பாட்டில் பூனையால் தள்ளிவிடப்பட்டு கீழே உழுந்ததில் வாப்பாடு மட்டும்தான் (மேல்பகுதி) மூடியோடு சேர்ந்து ஒடஞ்சு கெடந்தது. அதில் இருந்த காலிட்டர் எண்ணையில் பாதியளவு சிந்தி வேறபோயிருச்சே..நான் என்ன பண்ணுவன் சாமீ கருப்பராயா காப்பாத்து என்னைய. நான் என்னதான் செய்வன்னே தெரியலையே...


 நம்ம உடன்பிறப்பு ஒண்ணுமே தெரியாதவானாட்டம் பைகெட்ட எடுத்துகிட்டு பள்ளிகோடத்துக்கு நடந்தே கெளம்பிட்டான். அண்ணனுக்கு அடி விழுகுதுன்னா அடுத்த நிமிசத்துல அவன ஆண்டியுர்ல போய்ப் பாக்கலாம்...அப்படி ஒருதடவ எருமைக்கு தவுடு கலக்கும் ஈயக் குண்டாவ வேணும்னே கல்ல மேலபோட்டு ஒடுக்க அதப் பாத்துட்டு அம்மா  இதா வாரன்...நிமிசத்துல வந்திட்டேன் (இரு வருகிறேன்), எதுக்கு தவுட்டுக் குண்டாவ ஒடுக்குண? உன்னைய உறிச்சு உப்பத் தொடவினாத்தான் நீ சொன்னபடி கேப்ப... ன்னு மெரட்டுனவுடனே ஓடுனவுந்தான் எங்க போனான்னே தெரியாம கடசியா ஆண்டியூர் பக்கம் குண்டு வெளையாடுறான்னு தகவல் கெடச்சுது. நாங்க தேடிட்டு போறத தெரிஞ்சுக்கிட்டு வாய்க்கால் மேட்டுல இருக்கற "ஒட்டஞ்செடி" க்குள்ள போய் படுத்துகிட்டான். ஆண்டியுர்ல பலபேரு சைக்கிள் வெச்சுகிட்டு வந்து கூடவே தேடுனாங்க. அட யாரக் காணோம்கூடுதொர பையனக் காணமாமா அக்கோவ் !! அடீ... அம்பக் காணமா? அறிவக்காணமா (கூடுதொரக் கவண்டருக்கு அன்புச்செல்வன், அறிவுச்செல்வன்னு ரெண்டு பசக..  :p )... அம்மிணி இப்பிடி தங்கமாட்டப் பசகளப் பெத்து வளத்தி இன்னக்கி என்ன பேசுன நிய்யி ? கொழந்தைகள? நீ கம்முனே இருக்க மாட்ட லச்சுமி நிய்யி.... என்று அம்மாவையும் கண்டித்தார்கள். நான் ஒண்ணுமே சொல்லுலீங்க அத்தேய்... என்ர பையன காணமுங்க என்று அழுதார்... பொதர் பக்கமா ஸ்டாண்டப் போட்டு ரெண்டு மூணு சைக்கிள ஒண்ணா நிறுத்தி கையில பெடல் கட்டயப்புடிச்சுகிட்டே பெரகால வீல்சக்கரத்த(!!) சுத்தி டயனமா லைட் அடிச்சும், கூடவே பேட்ரி லைட் அடிச்சும் ஒட்டங்காய் செடிப்பொதரில் ஒளிஞ்சு படுத்திருந்த அறிவுசெல்வத்த (!!!) கண்டு புடிச்சு ...அட மாப்ள ங்கொக் .......ளி... இங்கியா இருக்கற ன்னு சிரிச்சுகிட்டே கையில தூக்கிட்டு வந்தாரு ஆட்டுப் பட்டி வெச்சிருந்த ஆறுச்சாமி மாமன். இதனாலையோ என்னமோ அன்னையில இருந்து அவனுக்கு மட்டும் அடியே விழுகாது. எனக்கு மட்டுமே நேரம் அடிக்கடி கெட்டுப்போகும்.  

வண்ணார் சொன்னபடியா கழுத சொன்னபடியா என்பார்கள். அதுபோல நானா எண்ணெய் பாட்டலா ன்னு நெனச்சுகிட்டு வெளிச்செண்ணெயும் தண்ணி மாதிரித்தான இருக்குது.
அதுக்குள்ளயே தண்ணி ஊத்திக் கலக்கி வெச்சுட்டம்ன்னா அம்மாவுக்கு தேரீவா போகுதுன்னு நெனச்சுகிட்டு..வேற ஒரு ஆர்லிக்ஸ் பாட்டல (அதுவும் அதேமாதிரி இருக்கற) தேடிப் புடிச்சு  அதுல போட்டு வெச்சுருந்த வெள்ள ரவைய ஒரு அமுல் டப்பில கொட்டி வெச்சுட்டு அப்பாவோட டரிக்கி துண்டோட மொனைய திருகுனாப்புல உள்ள விட்டு நல்லா சுத்தமா தொடச்சேன். அப்புறம் சால்பானயில இருந்த தண்ணியக் கெலாசுல மோந்து காலிட்டர் வார அளவுக்கு சூதானமா ஊத்தினேன். நான் என்ன கல்குழியில் தண்ணீரில் விளக்கெரித்துத் தத்துவம் சொன்ன வள்ளலார் பெருமானா? தண்ணிய ஊத்துனவுடன் உடனே கரஞ்சு கொஞ்சமா இருந்த வெளிச்செண்ணெய் திரும்பி வந்துவிட? அய்யோ சாமீ...உள்ள ஊத்துன தண்ணியெல்லாம் மொட்டுளி போட்டுட்டு கொஞ்சமா இருந்த எண்ணையையும் கெடுத்துப் போடுச்சே... என்ர கெரகம்... இன்னிக்கி வட்டி மொதலுமா சேந்து கெடைக்கும். இன்னைக்கி என்னப்பெத்த மகமாயி ஏழு கெடாக் கேப்பாளே.. நான் என்ன பண்ணுவன்... அழுகாச்சு வெடிச்சுகிட்டு வந்துது.

ஒரு வெறி வந்து பாட்டலுக்கு மூடியப்போட்டு சலக்கு சலக்குன்னு ஒரு பத்துத் தரம் மேலயும் கீழையும் ஆட்ட தண்ணி கலங்குனாமாதிரி தெரிஞ்சது... முருகா காப்பாத்திட்டடா மகராசா... ன்னு நெனைக்கறதுக்குள்ள மறுபடியும் தண்ணி கீழ.. எண்ணை மேலவும் வந்திருச்சு... ஒரு பத்து நிமிஷம் ஆட்டினப்புறம் கரிமமும் நீர்மமும் வேதிச்சமநிலை (equilibrium) அடைஞ்சமாதிரி பாட்டில் பூராம் நொரயோட இருந்தது. அப்பாடா...இப்பிடியே ஆடாம அசையாம செலுப்புல கொஞ்சம் உள்ள தள்ளி ஒரு கோட்டுல வெச்சுட்டேன். மணி ஏழரை ஆகிப்போச்சு...எனக்கும் தான். உன்னா அரமணி நேரத்துல பஸ் வேற வந்திரும் அப்படின்னு வேகவேகமா பல்ல வெளக்கப் போகும்போதுதான் நெனப்பு வந்துது எண்ணை சிந்தின எடத்தத் தொடைக்கவே இல்லைன்னு. சாணி போட்டு வளிச்சிருக்கற தரை மேல சிந்தின  எண்ணை ஒரு மொறத்தகலத்துக்கு எண்ணைப் பசையாகி வடவடன்னு ஆகிக் கெடந்தது. இது எப்பிடியும் அம்மா வந்தவுடன் காமிச்சுக் குடுத்திருமே? என்ன பண்ணலாம்?

அடுத்த ஐடியா.... வீடு, வாசல், மொறம், இராக்கூடை, ஈக்கித்தட்டம், சாடு, சோளம்-கொள்ளு வெதைக்க, நெடக்களைக் காய் சால் போட உதவும் பொட்டிக்கூடை, குப்பை மண்ணு வளிக்க கொரக்கூடை ன்னு எல்லாமே மாட்டுச்சாணியக் கொண்டுதான் அம்மா வளிச்சு (மெழுகி) வெச்சுருப்பாங்க. ஆனா நம்ம காட்டுல மாடு இல்ல. யூக்காலி எருமீக மட்டும்தான். எருமைச்சாணி ஊடு வளிக்கரதுக்கு ஆகாது.
எருமைச்சாணியின் மணம் பற்றி என் முன்னொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.


 ஆபத்துக்கு பாவமுமில்ல, அடிவாங்க தெம்புமில்லைன்னு மனசுல வெச்சுகிட்டு ஓடிப் போயி ஒரு கைநாம்பல் எருமைச்சாணி எடுத்துட்டு வந்து தானே  (அண்ணமார் கதையில உடுக்கையடிச்சுப் பாடும்போது இடையிடையே அந்தக் காட்சியை வசனமாக வருணனை செய்வார்கள்...அதுபோல நெனச்சுகிட்டு இந்தவரியப் படிங்க...) இந்த அம்பு ஆகப்பட்டவர் தானே (ஆமா !!....)  ஆத்தா மகமாயி, ஆயிரங்கண்ணுடையா, நீட்டிய வெரல் கத்தரிக்கும் நீலி, பொறியல் அவரை தான் கொண்டு பொள்ளாச்சி மேவிய பொன்காளியாகப் பட்டவளைத் தான் நினைத்து, அங்கே  வீரமண்டி போட்டுத்தானே (ஆமா !!....) எண்ணை சிந்துன எடத்த எருமச்சாணி கொண்டு வளிச்சாரே  அந்நேரம்....... பம் பம் பம்....

எப்பிடியும் என்னைக் காப்பாத்திப் போடு ஆத்தா...ன்னு சாமியக் கும்பிட்டுகிட்டே பள்ளிக்கூடம் போய்ச்சேர்ந்தேன். அன்னிக்கு சாயங்காலம் பெல் அடிச்சவுடன் இப்படியே எங்காவது போயிரலாமான்னு கூட நெனைச்சேன். ஒருவேள எண்ணைய பாக்காம இருந்தா கேக்குறபோது சொல்லிரலாம். இருந்தாலும் எப்பிடியும் தண்ணி கலங்கிருக்கும். அந்தக் கலக்கு கலக்கி வெச்சிருக்கிறோம். கலங்காம இருக்குமா? சாயந்திரம் சாளை போய் சேரும் வரை பயமாக இருந்தது. அப்படி இப்படின்னு சாளைக்கிட்ட போயாச்சு. அம்மாவக் காணோம். சாளைக்குள் போகறதுக்கு பயம். சும்மா ரெண்டு மூணு தடவ அம்மா அம்மா ன்னு கூப்பிட்டேன். ஏஞ்சாமி...என்ற சத்தம் பொடக்காளியில் இருந்து வந்தது... அடடா...என்ன குளுமையான வார்த்தைடா... எப்பிடியோ எண்ணையும் தண்ணியும் கலங்கிப் போச்சு போல இருக்குதுன்னு நெனச்சுக்கிட்டு பைகெட்ட திண்ணை மேல வெச்சுட்டு கொஞ்சம் தள்ளியிருக்கற ஆட்டாங்கல் மேல உக்காந்தேன் (நண்பர்கள் கவனிக்கவும் நான் வீட்டுக்குள் போகலை... ஏன்னா எங்கம்மா வீட்டுக்குள்ள வெச்சு வாய்கட்டி (சத்தம் வெளிய வராத மாதிரி கும்முறதுல) பூசை பண்றதுல  கில்லாடி..அதுனாலதான்).

அம்மாவும் வந்தார். எப்போதும் போலவே சிரிச்சுகிட்டே ஏஞ்சாமி இங்கியே உக்காந்துகிட்ட...உள்ள வா...பைகெட்ட உள்ள எடுத்து வெய்யி... கைகால் மூஞ்சி கழுவீட்டு வா காப்பி குடுக்கறேன் என்றார். அட...அட...எனக்கு தேன் வந்து காதுல பாஞ்சுது. நல்ல பையனாட்டம் போய் கைகால் மூஞ்சி கழுவீட்டு வந்து திண்ணையில உக்காந்தேன் (இப்பவும் வீட்டுக்குள்ள போகல...) அம்மாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் கூர்ந்து கவனித்தேன். ஒருதட்டத்தில் சின்ன வெங்காயம், புள்ளாச்சி ல இருந்து வாங்கிட்டு வந்த பூந்தி, நெடக்களை முத்து, மோர் மொளகாய் போட்டு வறுத்த பொரியும், ஒரு கெலாசில் வெல்லக் காப்பியும் கொண்டுவந்து கொடுத்தார்கள். எல்லாம் தின்றாகி விட்டது. அடுத்தது என்ன? சாளைக்குள் இருந்து படியில் தலை வளிச்சு அளந்து போட்ட (முக்கால் படி) அரிசியை அரிக்க வாணாச்சட்டியில் போட்டுக்கிட்டு வாசலுக்கு வந்தார். வாசலில் உட்கார்ந்துகொண்டு அரிசியை அரித்துக் கொண்டே சாமீ மேக்கோட்டுல இருக்கற மொடாவுல கொஞ்சம் புளி எடுத்துட்டுவா... ரசத்துக்கு ஊற வெய்க்கணும் என்றார்.

மனசுக்குள் கொஞ்சம் பயம்தான் இருந்தாலும் போகலாம்னு எந்திருச்சேன். பக்கத்துத் தோட்டத்து ஆத்தா லச்சுமீ இன்னக்கி அவரக்காயி என்ன வெலன்னு தூரத்துல நின்னுட்டே கேட்டாங்க. அதனால அந்த ஆத்தா கூட அம்மா பேசி முடிக்கறதுக்குள்ள வந்திடலாம்னு உள்ள போனேன். மொடாவுக்கிட்டப் போயி திரும்பிப் பார்த்தால் வெளிச்சம் இல்லை. என்னவாய் இருக்கும் நெனச்சீங்க... அம்மா தான் உள்ள வந்து கதவ சாத்திகிட்டாங்க.... கலைஞரக் கைது பண்ணும்போது சன் டிவி காரன் விட்ட அதே டயலாக் தான்... சத்தியமா நான்தான் அந்த வார்த்தைக்கு சொந்தக்காரன். அய்யோ கொல்றாங்களே... ஆத்தா வந்து காப்பாத்துங்களே... நண்பர்களே இன்னும் அடியே ஆரம்பிக்கல... எங்க அம்மா அடிக்கு முன்னாடி எப்பவுமே தச தரிசனம் கொடுத்திட்டுத்தான் ஆரம்பமே பண்ணுவாங்க... அவங்க வாய்மேல குச்சிய வெச்சுக் காமிச்சு மூச்சு வாங்கற சத்தம் வரக்கூடாது... ம்ம்ம்...வாய மூடுன்னா... அப்புறம் என்ன ஸ்டார்ட் மீசிக் தான்... கதவுக்கு தாழ் இல்லாததாலும், பக்கத்து தோட்டத்து ஆத்தா வந்து குறுக்காட்டினதுனாலையும் அன்னிக்கு பேரடியிலிருந்து தப்பிச்சுப் பொழச்சு வந்தனப்பா....  அப்புறம்தான் புரிஞ்சது...எண்ணையும் தண்ணியும் ஒன்னாகாதுன்னு ஏன் சொல்றாங்கன்னு....      

  அண்ணன்மார் உடுக்கையடிக் கதை கேட்க விரும்புவோர்
இதை சுட்டலாம்.

 http://www.youtube.com/watch?v=b7I1ze-0lSo&list=PL12CB0266BF8A85A5&index=2
  
பி.கு:  வெளிச்செண்ணெய் தண்ணீர் போல நிறமின்றி இருப்பதற்கு காரணம் இருக்கிறது. தேங்காய்ப் பருப்பின் நிறமும் ஒரு காரணமாய் இருந்தாலும் செக்கில் ஆட்டி எடுக்கும்போது வெளிர் மஞ்சள் நிறத்தில்தான் இருக்கும். இருப்பினும் பன்னீர் போல நிறமின்றி இருக்கவேண்டும் என்று தேங்காய்ப் பருப்பை எண்ணெய் செக்கில் ஆட்டும்போதே நூறு தேங்காய்களுக்கு ஒரு கிலோ மண்டை வெல்லம் அல்லது முக்கால் கிலோ வெள்ளைச்சர்க்கரை, ஒரு லிட்டர் நல்லதண்ணீர் சேர்த்து ஆட்டுவதால்தான் நிறமின்றிக் கிடைக்கிறது. இப்போதெல்லாம் கந்தகம் வைத்துத்தான் தேங்காய்ப் பருப்பைக் காயவைக்கிறார்கள்-கந்தகம் ஒரு நீர் நீக்கி எனவே பருப்பை ஈரப்பதம் அண்டாமலும் விரைவில் உலர்வதர்க்கும் பயன்படுத்தப் படுகிறது என்பதை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். கந்தகம் என்றவுடன் எனக்கு கேரளா நினைவுக்கு வருகிறது. கேரள மண் கூட கந்தக பூமி என்று சொல்வார்கள். அதனால் தான் எவ்வளவு மழை பெய்தாலும் அங்கு உக்கிரமாகவே இருக்கும். குளிர்ச்சி என்பது வெளியில் இருந்தாலும் வீட்டிற்குள் வியர்க்கும். கந்தகக் காற்று பசியை அதிகப்படுத்தும் வல்லமை கொண்டது.  அதனால் தான் அதிக நேரம் தாங்கக்கூடிய உணவுப் பொருட்களான  மட்டை அரிசி, நேந்திரம் பழம்... போன்றவற்றை உட்கொள்ளுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.


-நப்பின்னைநந்தன்

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

தண்ணீரை எண்ணையாக்கிய கதை...






நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது நிகழ்ந்தது இது. எங்களின் தோட்டத்தில் என் வயதுடைய தென்னைமரங்கள் (என் பிறப்புக்கு வந்த பணத்தில் வாங்கி நட்ட தென்னங்கன்றுகள்) உள்ள தோப்பின் நடுவில் ஒரு கூரை வீடு,   தெற்குப் பார்த்த உள் தாழில்லா ஒற்றைக்கதவு, கிழமேலாக அஞ்சு அங்கண நீளச்சுவர், உள்ளே நடுவீட்டில் ஒரு செவ்வக வடிவிலான மாடாக்குழி, செலவு, கடுகு டப்பி, உப்புச் சாடி, எண்ணெய் ஊற்றி வைத்திருக்கும் ஆர்லிக்ஸ் பாட்டில்கள், இன்னபிற சாமானங்கள் வெச்சுப் பொழங்க என்று செவுத்திலேயே  வடிவமைத்த செலுப்பு, பக்கத்திலேயே அம்மத்தா அம்மாவுக்குக் குடுத்த தண்ணி தவலை வைக்க பழங்காலத்துச் சாலாணி, பக்கத்திலேயே பாலும், தயிரும் வைக்க ஒரு மணிக்கவுத்தில் செஞ்ச உரி, நட்டடுப்பிலிருந்து கோட்டடுப்பு வரை வேகமாகத்  தீப்பாயும் அங்கலக்குறிச்சி அடுப்பு, அந்த அடுப்பின் புகை வெளியே போக தென் வடல் சுவற்றில் இரண்டு பெருந்துளைகள் அவற்றில் தண்ணி மடைகளின் நட்டுகள், ஆணிகள், டீசல் எஞ்சினின் சொழட்டி, அப்பாவின் சிகரெட் மிச்சங்கள், என்றைக்கு தேடினாலும் கிடைக்கும் தீப்பெட்டிகள் (தீப்பெட்டி சுரபியோவென பலமுறை வியந்திருக்கிறேன்-அது அப்பாவின் கைவண்ணம் என்று பின்னர்தான் புரிந்தது), ஆக்கிய சோத்துச் சட்டிகளை இறக்கி வைக்க குரவமார்கள் செய்துகொடுத்த திரவக்கொடி, புள்ளாச்சி மொறம், சாடுகள், சங்காயம் தூத்த, மொழங்கு தூத்த அளவான  தூத்துக் கூடைகள், கறுது அள்ளிப்போட மக்கிரி,      கூரையையும் , மேல் மூங்கில் வளையையும் தாங்க நிறுத்தியிருக்கும் இரு கூசங்களில் ஒன்றில் தயிர் சிலுப்ப நிரந்தரமாக வைத்திருக்கும் பனை நாரில் ஆன சிலுப்பு-தும்பு, அதனுள்ளே நிறுத்தி சிலுப்ப ஆள் வளத்தி மத்து, நெல்லு சோளம் குத்தவென்று ஒரு முனையில் ஆழக்குழியுள்ள பூனும், மறுமுனையில் மாவு இடிக்கவென்று  சிறுகுழியோடு பூன் போட்ட ரக்கையும் (உலக்கை), சாளையின் மேக்கோட்டில் புளி, கம்பு, கூப்பன் கடையில் வாங்கிய கோதுமை, பள்ளபாளையத்தில் (அம்மா பிறந்த ஊர்) இருந்து கொண்டுவந்த பழையவெல்லம் போட்டுவைத்து அடுக்கி வைத்திருக்கும் பழைய மண் மொடாக்கள், அம்மாவுக்கு சீராய்க்கொடுத்த ஒரு ரங்குப்பெட்டி (ட்ரன்க் பெட்டி), பருத்தி போட்ட பணத்திலும், மாத தவணைக்கும் வாங்கிய ஒரு லொடலொட பீர்வா, எவரடி பேட்டரியில் இயங்கும் ஒரு முள் முறிந்த "தக்காய்" ரேடியோ பெட்டி, அம்மாவும் அப்பாவும் "வேறயா" வந்தபிறகு வந்த  கலியாண, காதுகுத்து பத்திரிக்கைகளை உள்ளடக்கியும், வரப்போகும் பத்திரிக்கைகளை சேர்க்கவும் தயாராக மோட்டுவளை மூங்கிலில் கட்டி வைத்திருக்கும் கம்பி, அப்பாவின் திராவிடமும், அரசியலும், இலக்கியமும் பேசும் காகிதங்கள்,  புத்தகங்கள் நிறைந்த ஒரு இரும்புப் பெட்டி, சுவற்றில் ஒரு "அஜண்டா" ரகக் கடிகாரம், குழிதோண்டவும், இரவில் கதவுக்கு முட்டுக் கொடுக்கவும் இருக்கும் நீண்ட கடப்பாரி, எனக்கும் என் தம்பிக்கும் மட்டும் எட்டாத சுவர், அதன் மேலே வைத்திருக்கும் சிலுவர் பாத்திரங்கள், இய்யச்சட்டிகள், கெலாசுகள், கறிக்குழம்பு முதல் எருமைக்கு அம்பிளி வரை காய்ச்சப் பயன்படுத்தும் புட்டுப் பாத்திரம், மேலே ஓலை மொகுட்டில் சொருகியிருக்கும் வடதிலுப்பி, அம்மாவின்  மைகோதி, பட்டி நோம்பு அன்று மட்டும் பயன்படும் இரட்டை மைகோதி, மூணு அகப்பை, சம்பல் தேவைகளின் போது மட்டும்  பயன்படுத்தும் அன்னவாரிக் கரண்டி, சாம்பிராணி புகை போடவும், நெய் வேவிக்கவும், கேளான் குழம்பு காய்ச்சவும் பயன்படும் இரும்பு வாக்கணம், செலவு வறுத்துக் கொட்டி பாசி, தட்டை, கொள்ளு, தொய்யக்கீரை, நரிப்பயறு கடைய, சில சமயத்தில் அம்மாவால் என்னை அடிக்கவும் பயன்படும் பருப்பாமுட்டி (பருப்பாமுட்டியில் அடிவாங்கி உதடுவீங்கிக் கிடந்தவன் அடியேன்), கதவுக்கு இருபுறமும் மேலே களைவெட்டும் கொத்துகள், வெங்காயக் காட்டுக்கே உரித்தான அம்புகள் எனப்படும் சிறு கொத்துகள், கருக்கரிவாள்கள், ஆட்டாங்கல்-தென்னைமர சந்தில் வைத்திருக்கும் பெரிய கொடுவாள்,  தேங்காய்க்குலை கட்ட சூட்டிக்கயிறு சுருட்டுகள், உழைக்கோள் தடி, எங்களுக்கென குட்டை மம்முட்டி என்று எல்லாம் நினைவில் இருக்கின்றன.

சாளையின் முன்வாசலில் பூத்துக்குலுங்கும் இரண்டு முல்லைச் செடிகள் (பூ பூக்கும் தருணங்களில் ஒரு கிலோ வரை பூக்கும்-எனவே பெரிய பெரிய சிலுவர் கெலாசுகளில் போட்டுக்கொண்டு ஊருக்குள் போய் "மல்லீப்பூ வாங்கலியோ மல்லீப்பூவேய்" என்று விற்றிருக்கிறேன்), மஞ்சள் செவ்வந்தி, மூன்று நிறங்களில் டேலியா, பொங்கலுக்கென்று மட்டும் வளர்க்கும் செங்கரும்பு, எத்தனை தண்ணி பாய்ச்சாலும் அஞ்சு சீப்புக்கு மேல் காய்க்காத இரசதாளி வாழைமரமும், ஒரு சிறு அரிநெல்லிமரம், அதனடியில் ஒரு தவிட்டுத்தாழி, அஞ்சு குடம் புடிக்கும் ஒரு சிமிட்டித் தொட்டி, ஆட்டாங்கல், பக்கத்துலயே ஒரு ஒல்லு (உரல்) குத்தும் போது  தானியம் தெறிக்காதவாறு அடிப்பாகம் சரியான வட்டத்தில் வெட்டப்பட்ட பழைய இரும்பு வடைக்கல் வைத்தது, நீலத்தால் கரைகட்டி வெள்ளிதோறும் சாணியால் வளிச்ச சுவரொட்டிய திண்ணை, என்னைக்குமே சாணிப்பசுமை மங்காத வாசல், என்னைக்கும் எளனி கொடுக்கிற கெவுளி பாத்திரம் என்னும் செவ்விளநீர் மரம்,   காட்டுக்குள்ள பதிகொண்டிருக்கற கருப்பராயனுக்கு தண்ணியும் தழையும் தவுறாம குடுத்துரோனுமுன்னு ஆத்தா சொன்னதுனால சாமிக்கு மட்டுமென வளர்க்கும் அடுக்குச் செவ்வரளி, நந்தியாவட்டை, தென்னைமரங்களுக்குப் போகும் வாய்க்காலில் இருந்து நாங்கள் வெட்டிய கிளை வாய்க்காலில் செழித்துப் பூக்கும் செம்பருத்தி,  ஆனி, ஆடியில் பாளை தள்ளி ஆவணி புரட்டாசியில் அணில் கடித்து விழுந்த தேங்காய்க் குரும்பைகள் (இளநீருக்கும் முன்வடிவம்-சிறிது துவர்ப்பானாலும் நல்ல சுவையாக இருக்கும்), சித்திரை மாதக் கோடையில் வேலிகள், பள்ளங்களின் கரைகள் என்று எங்கும் நிறைந்து இருக்கும் வேப்பங்காய்களை, வேப்பமுத்துகளை  பொறித்துக் கொண்டாந்து சேர்த்து வைத்த சிமிட்டிப் பை மூட்டைகள், அம்மா எப்போது திண்ணையில் உட்காருவார் என்று பார்த்திருந்து உட்கார்ந்த வேகத்தில் தோளின் இருபுறமும் ஏறி உட்கார்ந்து கொஞ்சும் இரு வெடைக்கோழிகள், என் அப்பாவின் கையால் பிசைபட்ட தயிர் சோற்றுக்காகவே அவரை ரோட்டுக்கு அருகில் சென்று அமர்ந்திருந்து அவரை வரவேற்று சாளைக்குக் கூட்டி வரும் செம்மிப் பூனை என்று எழுத எழுத நினைவில் உதித்துக் கொண்டே இருக்கிறது எனக்கு.

என் அப்பாவின் பாசப் பூனை "மீனா" தான் இந்த கதைக்கு காரணமானவள். ஆண்டுக்கு இரண்டு முறைகள் என்று ஒரு பத்துப் பூனைக்குட்டிகளாவது ஈன்று விடுவாள். அப்பாவைத்தவிர எங்களில் வேறு யாரும் பூனையை அவ்வளவாகக் கண்டுகொள்ளமாட்டோம். பெரும்பாலும் குட்டிகள் கண்விழித்தபிறகு ஊருக்குள் உள்ள வெநாங்கோயிலில் விட்டுவிடுவோம். வேண்டுமென்போர்  வந்து பிடித்து செல்வார்கள். எந்தப் பாத்திரமும் மூடி வைத்திருந்தால் மீனா அதைத் தொடவே தொடமாட்டாள். திறந்த சட்டியாய் இருந்தால் அதற்குள்ளிருக்கும் பாலை அல்லது தயிரை சுவைக்காமல் போகவே போகமாட்டாள்.   அன்றைக்கு வியாழக்கிழமை. அப்பாவும், அம்மாவும் பொள்ளாச்சி சந்தைக்கு நேரமே முதல் பஸ்சுக்கு அவரைக்காய் கொண்டுபோயிருந்தார்கள். நானும் தம்பியும் பள்ளி கிளம்பவேண்டும். அம்மா போகும்போதே பாலைக் காய்ச்சி
"பெரை" ஊத்தி வைக்க சூடு அதிகமாக இருந்ததால்
"கொஞ்சநேரம் கழிச்சு பால் ஆறுன பெறகு பெரை ஊத்தி
வெச்சுரு சாமீ" என்று என்னிடம் சொல்லிவிட்டு சென்றார். அம்மா சாளையில் இல்லாத தைரியத்தில் கொஞ்சம் நேரம் வரைக்கும் தூங்கிக் கொண்டிருந்தோம். அப்போது தலைமாட்டுக்கு பக்கத்திலிருந்து "சலக் சலக்" என்ற சத்தம். வேறு யாருமில்லை மீனாதான் ஆற வைத்திருக்கும் பாலை பதம் பார்த்து அநேகமாய் முழுசாய் குடித்து விட்டிருந்தாள். பெரை ஊத்தி வைக்க சொன்னது அப்போதுதான் எனக்கு நெனப்பு வந்தது. அட சண்டாளப் பூனையே.. "எய்" என்று கனைத்தேன். சற்றும் எதிர்பாராத மீனா பக்கத்தில் இருக்கும் செல்ப்பின் மீது ஏற தவறுதலாய் அங்கே இரண்டு நாட்களுக்கு முன் வாங்கிய வெளிச்செண்ணெய் பாட்டில் மீது குதிக்க அங்கிருந்து தரையில் விழுந்தது. செல்ப்புக்கும் தரைக்கும் உயரம் குறைவு என்பதால் விழுந்ததில் பாதி எண்ணெய் மட்டும் சிந்தவும் நான் போய் அதை நிறுத்தி வைக்கவும் சரியாக இருந்தது. எனக்கோ உயிரே போய்க் கொண்டிருந்தது. எங்கள் இருவரில் யார் தப்பு பண்ணினாலும் எனக்கு மட்டுமே அடி நிறையக் கிடைக்கும். எப்படியும் இன்னைக்கி அடி நிச்சயம். பாலுக்கு பாலும் போச்சு, எண்ணையும் சிந்திப்போச்சு... எல்லாக் குடும்பங்களிலும் வறுமையும் கூடவே பயணித்தது.  கால் லிட்டர் வெளிச்செண்ணெய், அரை லிட்டர் கடலைஎண்ணெய், நூறு மில்லி விளக்கெண்ணெய் இருப்பின் ஒரு மாசத்துக்கு தலைக்கு தேய்க்கவும், சாறு காய்ச்சவும் போதுமானதாக இருக்கும்.

தேவனூர்புதூரின் மையப் பகுதியில் உள்ள ஒரு பெரிய வீட்டின் திண்ணைக்கு உடுமலையிலிருந்து இஸ்லாமிய சமூகத்தை சார்ந்த எண்ணெய்காரர்கள் வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் வருவார்கள். பெரும்பாலான மக்களின் எண்ணெய்த்தேவைகளை பூர்த்தி செய்வதும், ஆர்லிக்ஸ் பாட்டில் நிறைய ஊற்றிக் கொடுத்து அரை லிட்டருக்கான பணம் பெறுவதாலும், மளிகைக் கடைகளில் அளந்து ஊற்றும்போது பாட்டிலின் முக்கால் பாகம் மட்டுமே இருக்கும் என்பதாலும், இல்லாதவருக்கு கடனுக்கு எண்ணெய் கொடுப்பதாலும் அவர்கள் வியாபாரம் செழித்திருந்தது. எல்லாருமே "எண்ணக்காரங்க கிட்ட வாங்கி நோம்பிக்கி முறுக்கு சுட்டம்னா எண்ணை பொங்காது அம்மணியோவ்" என்று பேசிக்கொள்வதும் வழக்கமாய் இருந்தது. "அதயேங்கேக்குற அந்த கெழக்காலக் கடக்காரங்கிட்ட எண்ணைய வாங்கி முறுக்கே சுட முடீல அம்முணி...பொங்கு பொங்குனு பொங்கிபோகுது... அப்பறம் ரெண்டு மூணு கொய்யாத் தழைய போட்டபெறகுதாஞ் செரியாச்சு" என்ற பெண்களின் பேச்சை பொங்கல் சமயத்தில் அதிகமாகக் கேட்கலாம். அப்படி எண்ணெய் என்பது ஒரு அரிய உணவுப்பொருளாக இருந்ததால் எல்லோரும் மிகுந்த சிக்கனத்தொடும்தான் புழங்கினர். பெரும்பாலான தாய்மார்கள் உணவுப் பொருளை சரியாக பயன்படுத்தாத, வீண் செய்கின்ற எல்லோரையும் வெறுத்தார்கள். தம் மக்களாய் இருப்பின் தண்டனை கொடுக்கவும் தயங்கியதில்லை.

சரி நம்ம கதைக்கு வருவோம். உடைந்த பாட்டிலைப் பார்த்தவுடனே எனக்கு பயம், அழுகை சேர்ந்தே வந்தது. உடைந்தது ஏழு மணிக்கு. எட்டு பத்துக்கு பள்ளி செல்ல பேருந்து. கண நேரத்தில் ஒரு அருமையான (எனக்கு மட்டும்) எண்ணம் உதித்தது. அதை அடுத்த பதிவில் சொல்கிறேன்...

-நப்பின்னைநந்தன்      



                                      

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

வெயில்மோகிகள்

இலையுதிர்காலம் தொடங்கியாயிற்று
சிறு மழையோடு தழைகளும் சேர்ந்தே பெய்கிறது

ஞாயிற்றின் ஒளியாழியில் நரம்பகலக் கலிங்கம் போர்த்தி கடற்கரையில் இருக்கவே இறைஞ்சுகின்றனர் ஏகாந்தச்சுகிகள்

மஞ்சள் வெயிலில் மல்லாந்த மகத்துவம் பேசும் யாவரும்
கருங்கொண்டலின் கருணையை கொண்டாதுவதில்லை

நீர்த்திவலை மேற்படிலோ தீப்பொறியால் சுட்டார்ப்போல்
ஓடி ஒளிகிறார்கள் ஒவ்வொருவரும் கருங்குடைக்குள்

காகிதக்கப்பலுக்காக கிழிபடாத குழந்தைகளின் புத்தகம்தான்
எத்துணை அழகு என்று சிலாகிக்கிறார்கள் வெயில்மோகிகள்

காலாதி முடிவரையில்
முழுதும் போர்த்திக்கொள்ள,
முகநக நட்கப் பின்னர்
மெல்லமோதி முத்தமிட 

ஏதுவாய் வடிவமைத்த துணிப்பேழைகள் வழியெங்கும் விற்பனைக்கு

கோடை வரட்டும் ஆடை களைவேன் என்று சூளுரைத்துக்
கொண்டே முழுதும்பூண்டு மழையை சபிக்கிறார்கள்

தெருவெங்கும் கேட்கும் முத்தச்சத்தங்களைவிட இவர்கள்
மழைவெறுப்பில் கொட்டும் "உச்" மட்டுமே பெருகிக் கேட்கிறது

பண்டிகைகள் தீர்ந்துபோன வெறுமையில் கைபிசையும்
கூத்துக்காரனின் மனமொத்துக் கிடந்தார்கள் கோடை கொண்டாடியவர்கள்

கோட்டையும் குடிசையும் சந்தனமும் சாக்கடையும் சகலமும்
ஒன்றென்றே கொண்ட மழைக்கு வெயில்மோகிகள் மட்டும் விதிவிலக்கா என்ன?

எப்போதும் போல் ஓங்கிப் பெய்து தெய்வமாகிறது மழை

நான் மழைமோகியாகவே இருக்கிறேன் அன்பீந்த அருளென்னும் மழையோடு...

வியாழன், 18 செப்டம்பர், 2014

நானும் எருமைச்சாணியும்....

என் பள்ளிக்காலத்தில் என்னை என் அம்மா அதிகாலையில் (5.30 a.m) எழுப்பிய கணங்கள் இன்னும் நினைவில் இருந்து கொண்டே (பயமுறுத்திக்கொண்டே) என்னை வழி நடத்துகிறது. அப்போது கொடுமையாக தெரிந்தாலும் இன்று இனிமையே... நான் முதல் மகனாதலால் முதலில் "பெரீ சாமீ ...டேய் கண்ணு" ..எந்திரி சாமீ நேரமாச்சல்ல.. என்பார்...எழ வில்லையெனில் அடுத்து "பெரீ கண்ணு "..அப்புறம் "பெரீ தம்பீ ".. அப்புறம் ஒரே டேய்....ய்ய்.. ய்... இந்த சத்தத்தில் பக்கத்து சாளையில் (பக்கத்து தோட்டத்து வீட்டில்) உள்ளவர்கள்கூட எழுந்து விடுவார்கள்...அப்படியும் எழ வில்லையென்றால் என் அம்மா "அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணி பிடர்த்தலை பீடம் ஏறிய மடக்கொடிதான்.."
எழுந்தவுடன் சாந்தமாகிவிடுவார்...சீக்கிரமா பல்லு வெளக்கிட்டு வா காப்பி குடுக்கறேன் என்பார். உமிச்சாம்பலோடு பள்ளம் தேடி சென்று வென்று வந்தபின் 6 மணிக்குள் எருமைப்பால் கலந்த வெல்லக் காப்பி கிடைக்கும். காப்பியை கொடுக்கும்போதே சீக்கிரமா குடிச்சுப் போட்டு போய் அந்த சாணிய அள்ளி வீசிட்டு வந்துரு சாமி... என்பார். அய்யயோ அம்மம்மா சாமீ.... எனக்கு எருமைச் சாணி அள்ளுவதை விட கொடுமை வேறு எதுவுமே இருக்க முடியாது. 10 மாடுகளை வைத்துக் கூட சமாளித்து விடலாம். 10 விசுவு (25 சோளத்தட்டு கற்றைகள் சேர்த்தால் 1 விசுவு என்பது அளவு) சோளத்தட்ட பதினஞ்சு நாளயில மென்னு தின்னு சாணமாப் போட்டுரும் இந்த பழிகார எருமைக. ஒருநாளைக்கு அரை அரைக்குடமா அம்பதுதடவ ஒன்னுக்கு போய்...அப்பாடியோவ் சொல்லவே மூச்சு வாங்குது. இது நடுவுல மேயும்போது பள்ளம்படுகயில சேத்தக் (சேறு) கீனு கண்ணுல கண்டிருச்சு போயி படுத்து மேலுப் பூரா சேறு பூசிக்கிட்டுதான் வெளிய வரும். (எருமைக்கு கருமையான தோல் இருப்பதால் அதிக வெப்பத்திற்கு தாங்காது). அப்புறம் கேக்கவா வேணும்?


  மாட்டுச்சாணத்தை கையில்தான் தொட்டு அள்ளவேண்டும் என்று மற்றவருக்கு சொல்லிக்கொண்டே சாணி அள்ள ஏதுவாக பனங்கைமட்டை (பனைமட்டை) செய்து வைத்திருப்பார்கள். ஆனால் எருமைச்சாணம் மாட்டுச்சாணத்தைப் போல சிறிய குத்தேறிகளாக இருக்காது. ஒரு பெரிய குத்தேரியாய் சில மணிகளுக்கு முன்தின்று சீரணிக்காத சோள மணிகள், வக்கிப்பில் (வைக்கோல்) சிதறல்கள் என (கரும்பச்சை நிறத்தில் ஒரு பிட்சா என்று கூட சொல்லலாம்) ஒவ்வொரு எருமையைச்சுற்றிலும் (எங்களிடம் மூன்று எருமைகள் அதன் கன்றுகள் என்று ஆறு உருப்படிகள்) ஒரு ஏழெட்டு குட்டுகள் கிடக்கும். எல்லாத்தையும் எடுத்து காரச்சட்டியில் அள்ளிபோட்டு குப்பைமேட்டுக்கு சுமக்க வேண்டும். செமக்கும்போது வெடியால (காலையில்) குடிச்ச காப்பி என்ன...அம்மா கொடுத்த தாய்ப்பால் மொதக்கொண்டு ரசமே வந்திரும்...அப்படிக் கனமா இருக்கும்ங்க... இதுல நடுவுல எருமிக நம்ம மேல ஒரே கரிசனமா நாக்க சொளட்டிகிட்டு நக்கும் பாருங்க... எதுக்கு நக்கும் னு நெனைக்கிறீங்க? அதனோட சாணி நாத்தம் அதுவாலையே தாங்க முடியாம நம்மள வேற எடத்துக்கு மாத்தசொல்லி தீனி போடசொல்லித்தான். (அந்த எடத்துலயே தீனி போட்டீங்கனா திங்காதுக). 

எப்படியோ அடுத்த அரைமணி நேரத்தில் அள்ளிகொட்டியவுடன் வேலை முடிஞ்சதுன்னு நெனச்சு நம்பி அம்மாவப் பார்த்தா மகராசி பருத்திக் காட்டுக்குள்ளையோ அல்லது அவரைக் காட்டுக்குள்ளயோ நின்னுகிட்டு வா சாமீ...ஒரே ஒரு மடி பருத்தி அல்லது ஒரே ஒருபை அவரைக்காய் பொறிச்சுப்போட்டு பள்ளிக்கூடம் போயிரு சாமீ...நான் ஒருத்தியும் என்னாரம் (எவ்வளவு நேரம்) பொறிக்கறது?” என்பார். அம்மாவுடன் ஓரிரு நெறை (இருபுறமும் செடிகளுக்கு இடையே செல்லும் வாய்க்கால்) கூடவே சென்று பருத்தியோ ஏதேனும் காய்களோ பறித்துக் கொடுத்துவிட்டுத்தான் 8.10 மணி 33 பேருந்தை (உடுமலை பருத்தியூர்) என் தோட்டசாளைக்கு அருகிலேயே நிறுத்தி ஏறி பள்ளி செல்வேன். TCH, வரலெட்சுமி, LRA மற்றும் மானாவாரிப் பருத்திரகங்கள் என கோவைமாவட்டமே செழித்துக் கிடந்தது.. உடுமலை வட்டம் முழுதும் நூற்பாலைகள் பல்லாயிரக்கணக்கான மக்களை வாழவைத்துக் கொண்டிருந்தன. மார்கழி பனியில் கொத்துக் கொத்தாய் காய்க்கும் கோழி அவரை, பீக்கிங்காய், அரசாணிக்காய், நாட்டு வெண்டை என மக்கள் குழம்பு காய்ச்சி உண்டு சலித்தனர். வருசத்தில் ரெண்டு பட்டம் கடலைக்காய் விளைந்தது. விற்றது போக மீதமுள்ள நிலக்கடலையை காயவைத்து எண்ணெய் ஆட்ட செக்குகள் நிரம்பிய ஆலைகள் ஊர்தோறும் நிரம்பிக் கிடந்தன. மளிகைக்கடை அண்ணாச்சி கடைகளில் எப்போதும் மக்கள் ஏதோ ஒன்றை வாங்கிக் கொண்டிருந்தார்கள். பருத்திக்காட்டு ஓரங்களில் நட்டிருந்த நாட்டுத்துவரை சொந்த பந்தத்துக்கு கொடுத்தனுப்பிய பிறகும் அடுத்த வருடம் துவரம்பருப்பு வரும்வரை மூயாது... (நாட்டுத்துவரை சுத்தம் செய்யும் முறையை இன்னொரு பதிவில் சொல்கிறேன்....). 

பருத்தி முதலான தானியம் வாங்குவதற்கு பெண்கள் முதலான வியாபாரிகள் எங்கும் இருந்தார்கள். காட்டுக்குள் அறுவடை செய்த தானியம் வீடு வந்து சேரும் முன்னே வியாபாரிகள் வந்து விலைபேசுவார்கள்..) பத்து ரூபாய்க்கும் பதினொரு ரூபாய்களுக்கும் இடையே சிலசமயம் வியாபாரிகள் மாறிப்போனதுண்டு. இராத்தலில் (weighing balance) தானிய மூட்டையை மாட்டிவிட்டு நாலாபுறமும் கண்களை சுழலவிட்டபடி (ரொம்ப alert ஆம்-சில வியாபாரிகள் தன் சுண்டுவிரலால் மூட்டையை லேசாக தூக்கினால்கூட ஐந்துஆறு கிலோ குறைவாக இராத்தல் காட்டிவிடும் என்பதற்காக) எங்களின் அம்மாக்கள் அளந்து கொடுத்தார்கள். 


மண், காலநிலை, நீரிருப்பு இவற்றை மையமாகக்கொண்ட, நம் முன்னோர்களின் அனுபவத்தோடு விளைந்த  பாரம்பரிய பலதானிய விவசாயங்கள் வழக்கொழிந்து போய் “வெண்கலப் பூட்டை உடைத்து விலக்குமாரை திருடியது போல”  ரெண்டுக்குரெண்டு அடிக்குழியில் தேங்காயைப் புதைத்துவிட்டு  அதனருகில் தண்ணீருக்காக (வந்தால் மலையாம் போனால் ம.....ம்) ரெண்டாயிரம் அடியில் இன்னொரு குழியை ஆழநோண்டி பத்துநாளுக்குக்கொரு தண்ணிஎன்று பீய்ச்சிப் பாய்ச்சிப்பின் அவ்வப்போது பாளை தள்ளீருச்சா? குரும்பை விழுந்துருச்சா? வண்டு தின்னு போட்டுதா? தொண்ணூறு தேங்காய்கள் காய்த்து விட்டதா வேலையத்தவன் விட்டத்தப் பார்ப்பதுபோல் பாதியாய்ப் பட்டுப்போன மரத்தை அண்ணாந்து பார்த்துப் பார்த்து சலித்துப் போய் சர்க்கரை நோயால் மெள்ளமாக மெல்லப்பட்டு இப்பெல்லாம் நாங்க ஆசுபத்திரிகளில் வெவசாயம் செய்யுறோம். எங்க ஊர்லையே இப்போ பலசரக்குக் கடைகள் வந்தாச்சுங்க... 

எண்ணெய் ஆட்டவும், கடலை உடைக்கவும், நெல்லு குத்தவும் இருந்த ஆலைகள் எல்லாம் எங்க போச்சுன்னே தெரியலீங்க. இப்போவெல்லாம் நாங்க யாரும் நல்லா வெளஞ்ச நெத்துத் தேங்காய் போட்டு வெளிச்செண்ணெய்  ஆட்டிக் கொழம்பு வெச்சு சாப்புடறதில்லீங்க. தேங்காய் ஏவாரிகள் கழிச்சுப் போட்ட கழிகாய்களத்தான் (கூகைக் காய்) (மட்டை கூட எடுக்க முடியாத அளவில் நாரெல்லாம் சுருங்கிக் காய்ந்து கிடக்கும்) கோடாலி கொண்டு பிளந்து காயப்போட்டு பருப்பு எடுத்து ஒருவித வாசமடிக்கும் எண்ணெய் ஆட்டுரோம்ங்க. பொதிபொதியாய்ப் பருத்தியும், மூட்டை மூட்டையாய் நெடக்கலைக் காயும், பை பையாய்க் காய்கறிகளும், வண்டி வண்டியாய்த் தக்காளிப்பழங்களும், சலகை சலகையாய் நெல்லும், விசுவு விசுவாய் சோளத்தட்டும், சாடு சாடாய் தட்டை/பாசிப் பயிறும், படி படியாய் நாட்டு மாட்டுப் பாலும், வெண்ணையும், நெய்யும், தயிரும் அளந்து கொடுத்த நாங்கள் இப்போவெல்லாம் தேங்காய் ஏவாரி வீட்டுக்கு நடையா நடந்து அப்பறம் போன் மேல போன் போட்டாத்தான் (காசு வாங்க அல்ல தேங்காய் போட வரச்சொல்லி) அவரு தேங்காய் போட ஆள் அனுப்புவாருங்க. அவங்களே போட்டு அவங்களே ஆளுக்கு ரெண்டு கைக்காய், நூற்றுக்கு ஒரு லாபக்காய், மற்றும் நல்ல திரண்டதெல்லாம் சேர்த்து எண்ணி எடுத்துக்குவாங்க. தென்னை விவசாயத்துல எங்கேயோ போயிட்டம்னு எல்லாரும் சொல்லுறாங்க. ஆனா நாங்க எங்க போயிக்கிட்டு இருக்கறோம்ங்கரத நீங்கதான் சொல்லனும்ங்க!! தோப்பு வெச்சுருக்கரவங்க மட்டுமே பொழைக்க முடியும்ங்கற நெலமையில இருக்கறோம். இது எங்க போயி நிக்கும்னு தெரியலீங்க.