ஞாயிறு, 19 அக்டோபர், 2014

தண்ணீரை எண்ணையாக்கிய கதை...






நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது நிகழ்ந்தது இது. எங்களின் தோட்டத்தில் என் வயதுடைய தென்னைமரங்கள் (என் பிறப்புக்கு வந்த பணத்தில் வாங்கி நட்ட தென்னங்கன்றுகள்) உள்ள தோப்பின் நடுவில் ஒரு கூரை வீடு,   தெற்குப் பார்த்த உள் தாழில்லா ஒற்றைக்கதவு, கிழமேலாக அஞ்சு அங்கண நீளச்சுவர், உள்ளே நடுவீட்டில் ஒரு செவ்வக வடிவிலான மாடாக்குழி, செலவு, கடுகு டப்பி, உப்புச் சாடி, எண்ணெய் ஊற்றி வைத்திருக்கும் ஆர்லிக்ஸ் பாட்டில்கள், இன்னபிற சாமானங்கள் வெச்சுப் பொழங்க என்று செவுத்திலேயே  வடிவமைத்த செலுப்பு, பக்கத்திலேயே அம்மத்தா அம்மாவுக்குக் குடுத்த தண்ணி தவலை வைக்க பழங்காலத்துச் சாலாணி, பக்கத்திலேயே பாலும், தயிரும் வைக்க ஒரு மணிக்கவுத்தில் செஞ்ச உரி, நட்டடுப்பிலிருந்து கோட்டடுப்பு வரை வேகமாகத்  தீப்பாயும் அங்கலக்குறிச்சி அடுப்பு, அந்த அடுப்பின் புகை வெளியே போக தென் வடல் சுவற்றில் இரண்டு பெருந்துளைகள் அவற்றில் தண்ணி மடைகளின் நட்டுகள், ஆணிகள், டீசல் எஞ்சினின் சொழட்டி, அப்பாவின் சிகரெட் மிச்சங்கள், என்றைக்கு தேடினாலும் கிடைக்கும் தீப்பெட்டிகள் (தீப்பெட்டி சுரபியோவென பலமுறை வியந்திருக்கிறேன்-அது அப்பாவின் கைவண்ணம் என்று பின்னர்தான் புரிந்தது), ஆக்கிய சோத்துச் சட்டிகளை இறக்கி வைக்க குரவமார்கள் செய்துகொடுத்த திரவக்கொடி, புள்ளாச்சி மொறம், சாடுகள், சங்காயம் தூத்த, மொழங்கு தூத்த அளவான  தூத்துக் கூடைகள், கறுது அள்ளிப்போட மக்கிரி,      கூரையையும் , மேல் மூங்கில் வளையையும் தாங்க நிறுத்தியிருக்கும் இரு கூசங்களில் ஒன்றில் தயிர் சிலுப்ப நிரந்தரமாக வைத்திருக்கும் பனை நாரில் ஆன சிலுப்பு-தும்பு, அதனுள்ளே நிறுத்தி சிலுப்ப ஆள் வளத்தி மத்து, நெல்லு சோளம் குத்தவென்று ஒரு முனையில் ஆழக்குழியுள்ள பூனும், மறுமுனையில் மாவு இடிக்கவென்று  சிறுகுழியோடு பூன் போட்ட ரக்கையும் (உலக்கை), சாளையின் மேக்கோட்டில் புளி, கம்பு, கூப்பன் கடையில் வாங்கிய கோதுமை, பள்ளபாளையத்தில் (அம்மா பிறந்த ஊர்) இருந்து கொண்டுவந்த பழையவெல்லம் போட்டுவைத்து அடுக்கி வைத்திருக்கும் பழைய மண் மொடாக்கள், அம்மாவுக்கு சீராய்க்கொடுத்த ஒரு ரங்குப்பெட்டி (ட்ரன்க் பெட்டி), பருத்தி போட்ட பணத்திலும், மாத தவணைக்கும் வாங்கிய ஒரு லொடலொட பீர்வா, எவரடி பேட்டரியில் இயங்கும் ஒரு முள் முறிந்த "தக்காய்" ரேடியோ பெட்டி, அம்மாவும் அப்பாவும் "வேறயா" வந்தபிறகு வந்த  கலியாண, காதுகுத்து பத்திரிக்கைகளை உள்ளடக்கியும், வரப்போகும் பத்திரிக்கைகளை சேர்க்கவும் தயாராக மோட்டுவளை மூங்கிலில் கட்டி வைத்திருக்கும் கம்பி, அப்பாவின் திராவிடமும், அரசியலும், இலக்கியமும் பேசும் காகிதங்கள்,  புத்தகங்கள் நிறைந்த ஒரு இரும்புப் பெட்டி, சுவற்றில் ஒரு "அஜண்டா" ரகக் கடிகாரம், குழிதோண்டவும், இரவில் கதவுக்கு முட்டுக் கொடுக்கவும் இருக்கும் நீண்ட கடப்பாரி, எனக்கும் என் தம்பிக்கும் மட்டும் எட்டாத சுவர், அதன் மேலே வைத்திருக்கும் சிலுவர் பாத்திரங்கள், இய்யச்சட்டிகள், கெலாசுகள், கறிக்குழம்பு முதல் எருமைக்கு அம்பிளி வரை காய்ச்சப் பயன்படுத்தும் புட்டுப் பாத்திரம், மேலே ஓலை மொகுட்டில் சொருகியிருக்கும் வடதிலுப்பி, அம்மாவின்  மைகோதி, பட்டி நோம்பு அன்று மட்டும் பயன்படும் இரட்டை மைகோதி, மூணு அகப்பை, சம்பல் தேவைகளின் போது மட்டும்  பயன்படுத்தும் அன்னவாரிக் கரண்டி, சாம்பிராணி புகை போடவும், நெய் வேவிக்கவும், கேளான் குழம்பு காய்ச்சவும் பயன்படும் இரும்பு வாக்கணம், செலவு வறுத்துக் கொட்டி பாசி, தட்டை, கொள்ளு, தொய்யக்கீரை, நரிப்பயறு கடைய, சில சமயத்தில் அம்மாவால் என்னை அடிக்கவும் பயன்படும் பருப்பாமுட்டி (பருப்பாமுட்டியில் அடிவாங்கி உதடுவீங்கிக் கிடந்தவன் அடியேன்), கதவுக்கு இருபுறமும் மேலே களைவெட்டும் கொத்துகள், வெங்காயக் காட்டுக்கே உரித்தான அம்புகள் எனப்படும் சிறு கொத்துகள், கருக்கரிவாள்கள், ஆட்டாங்கல்-தென்னைமர சந்தில் வைத்திருக்கும் பெரிய கொடுவாள்,  தேங்காய்க்குலை கட்ட சூட்டிக்கயிறு சுருட்டுகள், உழைக்கோள் தடி, எங்களுக்கென குட்டை மம்முட்டி என்று எல்லாம் நினைவில் இருக்கின்றன.

சாளையின் முன்வாசலில் பூத்துக்குலுங்கும் இரண்டு முல்லைச் செடிகள் (பூ பூக்கும் தருணங்களில் ஒரு கிலோ வரை பூக்கும்-எனவே பெரிய பெரிய சிலுவர் கெலாசுகளில் போட்டுக்கொண்டு ஊருக்குள் போய் "மல்லீப்பூ வாங்கலியோ மல்லீப்பூவேய்" என்று விற்றிருக்கிறேன்), மஞ்சள் செவ்வந்தி, மூன்று நிறங்களில் டேலியா, பொங்கலுக்கென்று மட்டும் வளர்க்கும் செங்கரும்பு, எத்தனை தண்ணி பாய்ச்சாலும் அஞ்சு சீப்புக்கு மேல் காய்க்காத இரசதாளி வாழைமரமும், ஒரு சிறு அரிநெல்லிமரம், அதனடியில் ஒரு தவிட்டுத்தாழி, அஞ்சு குடம் புடிக்கும் ஒரு சிமிட்டித் தொட்டி, ஆட்டாங்கல், பக்கத்துலயே ஒரு ஒல்லு (உரல்) குத்தும் போது  தானியம் தெறிக்காதவாறு அடிப்பாகம் சரியான வட்டத்தில் வெட்டப்பட்ட பழைய இரும்பு வடைக்கல் வைத்தது, நீலத்தால் கரைகட்டி வெள்ளிதோறும் சாணியால் வளிச்ச சுவரொட்டிய திண்ணை, என்னைக்குமே சாணிப்பசுமை மங்காத வாசல், என்னைக்கும் எளனி கொடுக்கிற கெவுளி பாத்திரம் என்னும் செவ்விளநீர் மரம்,   காட்டுக்குள்ள பதிகொண்டிருக்கற கருப்பராயனுக்கு தண்ணியும் தழையும் தவுறாம குடுத்துரோனுமுன்னு ஆத்தா சொன்னதுனால சாமிக்கு மட்டுமென வளர்க்கும் அடுக்குச் செவ்வரளி, நந்தியாவட்டை, தென்னைமரங்களுக்குப் போகும் வாய்க்காலில் இருந்து நாங்கள் வெட்டிய கிளை வாய்க்காலில் செழித்துப் பூக்கும் செம்பருத்தி,  ஆனி, ஆடியில் பாளை தள்ளி ஆவணி புரட்டாசியில் அணில் கடித்து விழுந்த தேங்காய்க் குரும்பைகள் (இளநீருக்கும் முன்வடிவம்-சிறிது துவர்ப்பானாலும் நல்ல சுவையாக இருக்கும்), சித்திரை மாதக் கோடையில் வேலிகள், பள்ளங்களின் கரைகள் என்று எங்கும் நிறைந்து இருக்கும் வேப்பங்காய்களை, வேப்பமுத்துகளை  பொறித்துக் கொண்டாந்து சேர்த்து வைத்த சிமிட்டிப் பை மூட்டைகள், அம்மா எப்போது திண்ணையில் உட்காருவார் என்று பார்த்திருந்து உட்கார்ந்த வேகத்தில் தோளின் இருபுறமும் ஏறி உட்கார்ந்து கொஞ்சும் இரு வெடைக்கோழிகள், என் அப்பாவின் கையால் பிசைபட்ட தயிர் சோற்றுக்காகவே அவரை ரோட்டுக்கு அருகில் சென்று அமர்ந்திருந்து அவரை வரவேற்று சாளைக்குக் கூட்டி வரும் செம்மிப் பூனை என்று எழுத எழுத நினைவில் உதித்துக் கொண்டே இருக்கிறது எனக்கு.

என் அப்பாவின் பாசப் பூனை "மீனா" தான் இந்த கதைக்கு காரணமானவள். ஆண்டுக்கு இரண்டு முறைகள் என்று ஒரு பத்துப் பூனைக்குட்டிகளாவது ஈன்று விடுவாள். அப்பாவைத்தவிர எங்களில் வேறு யாரும் பூனையை அவ்வளவாகக் கண்டுகொள்ளமாட்டோம். பெரும்பாலும் குட்டிகள் கண்விழித்தபிறகு ஊருக்குள் உள்ள வெநாங்கோயிலில் விட்டுவிடுவோம். வேண்டுமென்போர்  வந்து பிடித்து செல்வார்கள். எந்தப் பாத்திரமும் மூடி வைத்திருந்தால் மீனா அதைத் தொடவே தொடமாட்டாள். திறந்த சட்டியாய் இருந்தால் அதற்குள்ளிருக்கும் பாலை அல்லது தயிரை சுவைக்காமல் போகவே போகமாட்டாள்.   அன்றைக்கு வியாழக்கிழமை. அப்பாவும், அம்மாவும் பொள்ளாச்சி சந்தைக்கு நேரமே முதல் பஸ்சுக்கு அவரைக்காய் கொண்டுபோயிருந்தார்கள். நானும் தம்பியும் பள்ளி கிளம்பவேண்டும். அம்மா போகும்போதே பாலைக் காய்ச்சி
"பெரை" ஊத்தி வைக்க சூடு அதிகமாக இருந்ததால்
"கொஞ்சநேரம் கழிச்சு பால் ஆறுன பெறகு பெரை ஊத்தி
வெச்சுரு சாமீ" என்று என்னிடம் சொல்லிவிட்டு சென்றார். அம்மா சாளையில் இல்லாத தைரியத்தில் கொஞ்சம் நேரம் வரைக்கும் தூங்கிக் கொண்டிருந்தோம். அப்போது தலைமாட்டுக்கு பக்கத்திலிருந்து "சலக் சலக்" என்ற சத்தம். வேறு யாருமில்லை மீனாதான் ஆற வைத்திருக்கும் பாலை பதம் பார்த்து அநேகமாய் முழுசாய் குடித்து விட்டிருந்தாள். பெரை ஊத்தி வைக்க சொன்னது அப்போதுதான் எனக்கு நெனப்பு வந்தது. அட சண்டாளப் பூனையே.. "எய்" என்று கனைத்தேன். சற்றும் எதிர்பாராத மீனா பக்கத்தில் இருக்கும் செல்ப்பின் மீது ஏற தவறுதலாய் அங்கே இரண்டு நாட்களுக்கு முன் வாங்கிய வெளிச்செண்ணெய் பாட்டில் மீது குதிக்க அங்கிருந்து தரையில் விழுந்தது. செல்ப்புக்கும் தரைக்கும் உயரம் குறைவு என்பதால் விழுந்ததில் பாதி எண்ணெய் மட்டும் சிந்தவும் நான் போய் அதை நிறுத்தி வைக்கவும் சரியாக இருந்தது. எனக்கோ உயிரே போய்க் கொண்டிருந்தது. எங்கள் இருவரில் யார் தப்பு பண்ணினாலும் எனக்கு மட்டுமே அடி நிறையக் கிடைக்கும். எப்படியும் இன்னைக்கி அடி நிச்சயம். பாலுக்கு பாலும் போச்சு, எண்ணையும் சிந்திப்போச்சு... எல்லாக் குடும்பங்களிலும் வறுமையும் கூடவே பயணித்தது.  கால் லிட்டர் வெளிச்செண்ணெய், அரை லிட்டர் கடலைஎண்ணெய், நூறு மில்லி விளக்கெண்ணெய் இருப்பின் ஒரு மாசத்துக்கு தலைக்கு தேய்க்கவும், சாறு காய்ச்சவும் போதுமானதாக இருக்கும்.

தேவனூர்புதூரின் மையப் பகுதியில் உள்ள ஒரு பெரிய வீட்டின் திண்ணைக்கு உடுமலையிலிருந்து இஸ்லாமிய சமூகத்தை சார்ந்த எண்ணெய்காரர்கள் வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் வருவார்கள். பெரும்பாலான மக்களின் எண்ணெய்த்தேவைகளை பூர்த்தி செய்வதும், ஆர்லிக்ஸ் பாட்டில் நிறைய ஊற்றிக் கொடுத்து அரை லிட்டருக்கான பணம் பெறுவதாலும், மளிகைக் கடைகளில் அளந்து ஊற்றும்போது பாட்டிலின் முக்கால் பாகம் மட்டுமே இருக்கும் என்பதாலும், இல்லாதவருக்கு கடனுக்கு எண்ணெய் கொடுப்பதாலும் அவர்கள் வியாபாரம் செழித்திருந்தது. எல்லாருமே "எண்ணக்காரங்க கிட்ட வாங்கி நோம்பிக்கி முறுக்கு சுட்டம்னா எண்ணை பொங்காது அம்மணியோவ்" என்று பேசிக்கொள்வதும் வழக்கமாய் இருந்தது. "அதயேங்கேக்குற அந்த கெழக்காலக் கடக்காரங்கிட்ட எண்ணைய வாங்கி முறுக்கே சுட முடீல அம்முணி...பொங்கு பொங்குனு பொங்கிபோகுது... அப்பறம் ரெண்டு மூணு கொய்யாத் தழைய போட்டபெறகுதாஞ் செரியாச்சு" என்ற பெண்களின் பேச்சை பொங்கல் சமயத்தில் அதிகமாகக் கேட்கலாம். அப்படி எண்ணெய் என்பது ஒரு அரிய உணவுப்பொருளாக இருந்ததால் எல்லோரும் மிகுந்த சிக்கனத்தொடும்தான் புழங்கினர். பெரும்பாலான தாய்மார்கள் உணவுப் பொருளை சரியாக பயன்படுத்தாத, வீண் செய்கின்ற எல்லோரையும் வெறுத்தார்கள். தம் மக்களாய் இருப்பின் தண்டனை கொடுக்கவும் தயங்கியதில்லை.

சரி நம்ம கதைக்கு வருவோம். உடைந்த பாட்டிலைப் பார்த்தவுடனே எனக்கு பயம், அழுகை சேர்ந்தே வந்தது. உடைந்தது ஏழு மணிக்கு. எட்டு பத்துக்கு பள்ளி செல்ல பேருந்து. கண நேரத்தில் ஒரு அருமையான (எனக்கு மட்டும்) எண்ணம் உதித்தது. அதை அடுத்த பதிவில் சொல்கிறேன்...

-நப்பின்னைநந்தன்      



                                      

1 கருத்து: