ஞாயிறு, 12 அக்டோபர், 2014

வெயில்மோகிகள்

இலையுதிர்காலம் தொடங்கியாயிற்று
சிறு மழையோடு தழைகளும் சேர்ந்தே பெய்கிறது

ஞாயிற்றின் ஒளியாழியில் நரம்பகலக் கலிங்கம் போர்த்தி கடற்கரையில் இருக்கவே இறைஞ்சுகின்றனர் ஏகாந்தச்சுகிகள்

மஞ்சள் வெயிலில் மல்லாந்த மகத்துவம் பேசும் யாவரும்
கருங்கொண்டலின் கருணையை கொண்டாதுவதில்லை

நீர்த்திவலை மேற்படிலோ தீப்பொறியால் சுட்டார்ப்போல்
ஓடி ஒளிகிறார்கள் ஒவ்வொருவரும் கருங்குடைக்குள்

காகிதக்கப்பலுக்காக கிழிபடாத குழந்தைகளின் புத்தகம்தான்
எத்துணை அழகு என்று சிலாகிக்கிறார்கள் வெயில்மோகிகள்

காலாதி முடிவரையில்
முழுதும் போர்த்திக்கொள்ள,
முகநக நட்கப் பின்னர்
மெல்லமோதி முத்தமிட 

ஏதுவாய் வடிவமைத்த துணிப்பேழைகள் வழியெங்கும் விற்பனைக்கு

கோடை வரட்டும் ஆடை களைவேன் என்று சூளுரைத்துக்
கொண்டே முழுதும்பூண்டு மழையை சபிக்கிறார்கள்

தெருவெங்கும் கேட்கும் முத்தச்சத்தங்களைவிட இவர்கள்
மழைவெறுப்பில் கொட்டும் "உச்" மட்டுமே பெருகிக் கேட்கிறது

பண்டிகைகள் தீர்ந்துபோன வெறுமையில் கைபிசையும்
கூத்துக்காரனின் மனமொத்துக் கிடந்தார்கள் கோடை கொண்டாடியவர்கள்

கோட்டையும் குடிசையும் சந்தனமும் சாக்கடையும் சகலமும்
ஒன்றென்றே கொண்ட மழைக்கு வெயில்மோகிகள் மட்டும் விதிவிலக்கா என்ன?

எப்போதும் போல் ஓங்கிப் பெய்து தெய்வமாகிறது மழை

நான் மழைமோகியாகவே இருக்கிறேன் அன்பீந்த அருளென்னும் மழையோடு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக